Showing posts with label ரோஷம். Show all posts
Showing posts with label ரோஷம். Show all posts

தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி

4)//"அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்."
இக்கூற்றும் சரியாக எனக்குத் தோன்றவில்லை. பார்க்குமிடமெல்லாம் வேற்றுமைகள் நிறைந்த உலகமாகத்தானே இருக்கிறது. படைப்பினில் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? இல்லையே!//

ஆம். வேற்றுமைகள் நிறைந்ததுதான் உலகம். படைப்பில் அனைவரும் ஓரே மாதிரியாக இருப்பதில்லை என்பதும் உண்மைதான்.

ஆனால் அவன் படைத்த இந்த வேற்றுமைகளின் அடிப்படையில், அவனது முன்னிலையில், மனிதர்களில் உயர்ந்தவர்கள் தாழந்தவர்கள் என்ற பேதமிருக்கக் கூடாது.

இஸ்லாத்தில், இறைவனது முன்னிலையில், மேற்கூறிய வேற்றுமைகளின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு இல்லை.

5)//"பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும்"
பின் எதற்கு 6 நாட்கள் படைப்பிற்கு - அதுவும் ஒவ்வொன்றாய்? பின் கடவுள் ரெஸ்ட் எடுத்ததாகவும் உள்ளதே!//

கடவுள் ரெஸ்ட் எடுத்ததா:
இறைவனுக்கு ஓய்வு தேவைப்படாது என்று இஸ்லாம் சொல்கிறது.
ஏனெனில் அவன் ஓய்வெடுக்கும் நேரத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் தேவைகளை யாரிடம் கேட்பது என்ற கேள்வி எழுகிறதல்லவா?.

பின் எதற்கு ஆறு நாட்கள்?
குர்ஆன் அத்தியாயம் 7 வசனம் 54 மற்றும் அத்தியாயம் 10 வசனம் 3லும் அல்லாஹ் வானங்களையும் புமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக கூறுகிறான்.

இறைவன் முடிவெடுத்து செய்கின்ற ஒன்றில் கேள்வி கேட்கிற உரிமை யாருக்கும் இல்லை. ஏன் அவ்வாறு செய்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்.

அவ்வாறு அவன் படைத்ததால், நடைமுறை வாழ்க்கையில் அதனால் மனிதர்களுக்கு எந்த கெடுதலும் வரப்போவதில்லை.

அவன் சக்தியை அவன் கூறும் போது,; 'மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடிக்குள் பூமி அடங்கும்' என்றும் சொல்கிறான். பார்க்க குர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 67

6)(அ)//"தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால்..."
இதைக் கூட கட்டளையாகக் கடவுள் கொடுப்பாரா?//

வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் இஸ்லாம் சில வழிமுறைகளை விதித்துள்ளது. சில கட்டளைகளை வலியுறுத்தி சொல்கிறது. சிலவற்றை தேவையானால் ஏற்று நடக்கச் சொல்கிறது.
சிறுநீர் கழிப்பதில் கூட (மற்ற மனிதர்களுக்கும், அவருக்கும் துன்பமேற்படக் கூடாதென்பதற்காக) சில வழிமுறைகளை சொல்கிறது.
இஸ்லாம் வெறும் சடங்கும் சம்பிரதாயமும் கொண்ட மதமல்ல வாழ்வியல்.

6.(ஆ)தாடி இல்லாதவர்கள் முழு முஸ்லீம்கள் இல்லையா?
தாடி இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட சுன்னத்.
நிர்ப்பந்தங்களினால் ஒரு முஸ்லீம் தாடி வைக்கவில்லையென்றால் அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். தகுந்த காரணமேதுமின்றி ஒருவர் தாடி வைக்காது விட்டால், அவர் ஒரு சுன்னத்தை விட்ட குற்றமிழைத்தவராவார். அது அவருக்கும் இறைவனுக்கும் மத்தியிலுள்ளதாகும்.

7அ). //"இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் கூறுகிறது."

"You are either with us or with them". 9/11 -க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் சொன்ன இந்த வாக்கியத்தின் பொருளை நான் விளக்க வேண்டியதில்லை. மதத்தின் பெயரால் ஒசாமா செய்ததால் அந்த மதத்தையும், மதத்தைச் சார்ந்தவர்களையும், விரோதிகளாக அவர் பார்த்தார்; அதே போல்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு உலகத்தின் பல நாட்டவரும், பல நாட்டுத் தலைவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரைப் பொருத்தவரை அவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒன்று, உலகத்தில் எல்லோருக்கும் அதே போல்தான் தோன்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்ததை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இல்லையா?அதாவது, நீ அந்தப் பக்கமா, இந்தப் பக்கமா என்பதை வைத்துதான் உன் மறு வாழ்க்கையும், அதற்குரிய பரிசு / தண்டனையும் தீர்மானிக்கப் படும்.

இந்த புஷ்ஷின் கருத்திற்கும், மேலே சொல்லியுள்ள இஸ்லாமியக் கருத்திற்கும் - ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?//

ஒரு சில உதாரணங்களின் மூலம் இதற்கு பதிலளிக்கலாம் என எண்ணுகிறேன்.

i. கம்பெனியில்: நன்றாகவும் சரியாகவும் வேலை செய்தால் நல்ல சம்பளமும் பணியில் உயர்வும் தரப்படும். தவறாகவும் குறைவாகவும் வேலை செய்தால் சம்பளக்குறைப்போடு பணி உயர்வும் தரப்படாது என்கிறார்கள்.
ii. கல்லூரியில்: சரியான முறையில் வந்து, ஒழுங்காக நடப்பவர்களுக்கு internal assessmentல் நல்ல மதிப்பெண்கள் தரப்படும். சரியாக வராமலும், வந்தால் தகராறு செய்பவர்களுக்கும் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும் என்கிறார்கள்.
iii. பள்ளியில்: ஒழுங்காக படித்து நல்ல முறையில் தேர்வெழுதினால் தேர்ச்சி அடைவதோடு வாழ்க்கையிலும் முன்னேறலாம். சரியாக படிக்காமல் தேர்வில் சரியாக எழுதாமல் இருந்தால் தேர்வடைவதிலும் வாழ்வில் முன்னேறுவதிலும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிறார்கள்.
iv. கொள்ளையன் ஒருவன்: என்னோடு சேர்ந்து அந்த வங்கியை கொள்ளையடித்தால் வெகு விரைவில் நிறைய பணம் கிட்டும், மகிழலாம். யாராவது வர மறுத்தால் அவர்களை நான் உதைப்பேன், வலிதான் கிடைக்கும் என்கிறான்.

மேற்கூறப்பட்ட நான்குமே "You are either with us or with them" என்ற ஜார்ஜ் புஷ் வாதத்தைப் போன்றதுதானா தருமி ஐயா.

ஒன்று போல தோற்றமளித்தாலும், அந்தந்ந விடயங்களுக்கு தகுந்தாற் போல் பொருள் மாறுபடும். திருடன் சொல் ஆணவமாகவும் தவறானதாகவும் மற்றவை நேர்மையானதாகவும் இருக்கிறது. எனவே சிந்தனையைப் பயன்படுத்தி நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.

7ஆ). //However, my Q is based on the VIOLENCE in the words. whether it is aimed at fidels or infidels it is a very violent statement - a divine violence towards human beings.
a god need and should not bother whether a man reaches him through path A or B ... man should reach him, that is all what it should be.//

இதற்கும் சில உதாரணம் மூலமே விளக்க நினைக்கிறேன் ஐயா.

ஆயிரக்கணக்கானோர் பணிபுரியம் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் இருக்கிறார். அவருடைய நிறுவனத்தின் சில ஊழியர்கள் அவரை விட்டு விட்டு வேறொருவரை உரிமையாளர் என்கின்றனர். அல்லது, ஒரு கடைநிலை ஊழியர், உரிமையாளர் அமர வேண்டிய இடத்தில் அமர்ந்து கொண்டு, உரிமையாளர் போன்ற ஆணையிடுகிறார் எனக் கொள்வோம்.
உண்மையான உரிமையாளரால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

இன்னும் சரியாக விளங்குவதற்காக ஒரு கடுமையான உதாரணம் தருகிறேன். (முகம் சுளிக்க வேண்டாம். கடுமை என நினைப்பவர்களும், பெண்களும் மன்னிக்கவும்.)
தம் மனைவி, மகிழ்வோடு இருப்பதைத்தான் நல்ல கணவன் விரும்புகிறான். அதற்காக ஒருவனது மனைவி வேறொரு ஆணிடம் படுக்கை சுகம் காண்கிறாள். கணவனுக்கும் அவ்விடயத்தில் குறை வைப்பதில்லை எனக் கொள்வோம். எந்த நல்ல ஆண்மகனும்/கணவனும் இதை ஏற்றுக் கொள்வானா? மனிதனுக்கே இவ்வளவு ரோஷம் இருக்கிறதே!

இறைவன் அன்பானவன்தான் ஆனால் ரோஷமில்லாதவனில்லை. மனிதனை விடவும் பலகோடி மடங்கு ரோஷமானவன். "அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை" என்று இஸ்லாம் கூறுகிறது.

என் அறிவுக்கு எட்டிய வகையில் பதிலளித்திருக்கிறேன். இறைவனே மிக அறிந்தவன்.