Showing posts with label பஸாதி. Show all posts
Showing posts with label பஸாதி. Show all posts

ஜிஹாதி

இந்தியர்கள் பல்வேறு வகைகளில் தனித்துவம் வாயந்தவர்கள். நம் நாட்டில் முக்கியமான நான்கு நம்பிக்கையாளர் மத்தியிலும் சிலர் தீவிரவாதிகளாக உள்ளனர். கஷ்மீரில் முஸ்லீம்கள், நாகலாந்தில் கிறித்துவர்கள், பஞ்சாபில் சீக்கியர்கள், அஸ்ஸாமில் உல்பா இந்துக்கள். மாவோயிஸ்டுகளுக்கும் நக்ஸல்களுக்கும் தீவிரவாதமே துணை. இதல்லாது முக்கியமாக காவி ஹிந்துத்வ தீவிரவாதிகள்.

நேர்மையான போரை ஜிஹாத் என்றும், அநீதியாக வன்முறை மூலம் ஒன்றுமறியாத அப்பாவிகளின் மேல் இழைக்கப்படும் கொடுமையை பஸாத்(Fasaad) என்றும் குர்ஆன் தெளிவாக வரையறுத்துள்ளது. நாட்டிலே குழப்பம் விளைவிப்பவன் பஸாதி. எவனொருவன் ஒரு மனிதரை நியாயமின்றி (பஸாத் மூலம்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் மேலும், எவரொருவர் ஓர் உயிரை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்' எனச் சொல்கிறது குர்ஆன்(வசனம்32 சூரா5).

இஸ்லாமிய பார்வையில் குழப்பம் விளைவித்தல் கொலையைப் போன்றது. அதற்கு அதன் கடுமைக்கேற்ப கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல் போன்ற நான்கு விதமான விதமான தண்டணைகளை குர்ஆன் பரிந்துரைக்கிறது.

குழப்பம் விளைவிக்கும் ஒரு பஸாதி தன்னை ஜிஹாதி எனச் சொல்லிக் கொள்வதன் மூலம் முஸ்லீம்கள் மத்தியில் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான். இவர்கள் மக்களுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்காக குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் தருகின்றனர். ஹிந்துத்வாக்களும் அதையேதான் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இரு பிரிவாருக்கிடையில் எந்த வேற்றுமையும் இல்லை.

இறை நம்பிக்கை சார்ந்த விடயங்களில் இரு பிரிவாருக்குள் வேறுபாடுகள் தோன்றி விட்டல் அதில் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் மனிதனுக்கில்லை அது இறைவனுக்குரியது. "லா இக்ரா பித்தீன் - மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமுமில்லை" என்பதும் "லகும் தீனுக்கும் வலிய்யத்தீன் உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு" என்பதும்தான் இஸ்லாத்தின் வழி. கத்தோலிக்க புலனாய்வுக்குப்பின் வெளியேற்றப்பட்ட ஸ்பெயின் நாட்டு யூதர்களுக்கு உதுமானிய சுல்தான்கள் தங்க இடம் கொடுத்தது தற்செயலாக நடந்ததல்ல. மேற்சொன்ன குர்ஆனின் நெறி.

முஸ்லீம் பெயர் தாங்கிகள் நடத்தும் சண்டைகள் எல்லாம் ஜிஹாத் ஆகி விடாது. எவ்வித உலக இலாபங்களையும் நாடாமல் இறைவனிடம் நன்மையை பெறுவதை மட்டுமே குறியாகக் கொண்டு செய்யப்படும் எல்லா நல்லறங்களும் ஜிஹாத் தான். உண்மை அறிஞனுடைய நீதிக்கான பேச்சும், எழுத்தும், பொருள் உள்ளவர்கள் வறியவர்களுக்காகவும் நன்மையான வழிகளில் தர்மமாக செலவு செய்வதும் தன்னைத்தான் தூய்மையாக்கிக் கொள்ளுதல் எனும் பெரும் ஜிஹாத் ஆகும். சிறிய ஜிஹாதுகளில் உள்ளவைதான் போர்கள்.

தம் உளத்தூய்மைக்காக செய்யப்படும் ஜிஹாதைப் போல யார் வேண்டுமானாலும் ஜிஹாத் எனும் போர் அழைப்பை செய்ய முடியாது. இஸ்லாம் கடுமையான நிபந்தனைகளுடன் போரை அனுமதித்துள்ளது. அங்கே நம்பிக்கைத் துரோகம், தவறான வழிகளில் கொள்ளையடித்தல், உடல்களை சிதைத்தல், முதியோர், பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் ஆகியோரைக் கொல்லுதல், மரங்களை வெட்டுதல், உணவுக்காக அன்றி ஆடு மாடுகளைக் கொல்லுதல் போன்ற யாவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடாது.

ஒரு நாடு தாருல் இஸ்லாம் ஆக இல்லாமல் தாருல் ஹர்ப் ஆக இருந்தால் அங்கே போர் செய்ய இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் மார்க்கத்தை பின்பற்ற முடியாதவாறு பிற மத ஆட்சியாளர்களால் துன்புறுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நாடு இருந்தால் அந்த நாடுதான் தாருல்ஹர்ப். மொஹலாயர் வீழ்ச்சிக்குப்பின் மராட்டியர்களும் இராஜபுதனத்தாரும் ஆட்சி செய்த காலம் கூட தாருல்ஹர்ப் எனச் சொல்லப்படவில்லை. முஸ்லீம்களும் அவர்களும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகத்தான் இருந்தனர்.

நமது இந்தியா சோசலிச நாடு ஹிந்து நாடில்லை. நமக்கு முஸ்லீம் தனியார் சட்டத்தை நடைமுறைபடுத்திக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய நம்பிக்கை படி வாழ நமது அரசியல் நிர்ணயச்சட்டம் உரிமை வழங்கியுள்ளது. மறுக்கப்படும் நமது உரிமைகளுக்காக நாம் நடத்தும் சிறு சிறு போராட்டங்களால் எல்லாம் நாடு தாருல் ஹர்ப் நிலையை அடைந்து விட்டதாக யாரும் நினைத்து விடக்கூடாது.

நீதியும் நியாயமும் மக்களை சமமாகப் பாவித்தலுமே குர்ஆன்படியான வாழ்வு முறையாகும்.
ஜிஹாத் எனச் சொல்லிக் கொண்டு பயங்கரவாதம் செய்வோர் எல்லாம் ஜிஹாதிகளில்லை பஸாதிகள்(வெறும் குழப்பக்காரர்கள்)தான்.