நண்பர் ஆரூரன் பதில்களுக்கு என் விளக்கங்கள்

//என்னுடைய பதிவின் கருத்தையும் நோக்கத்தையும் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்பது தான்.//
உங்களின் ஆதங்கம் புரிகிறது. உங்கள் நாட்டு முஸ்லீம்களாகிய அவர்களை குறை கூறுவதை விடுத்து, அதற்காக ஒரு பழைய செய்தியை எடுத்துப் போட்டு, இஸ்லாத்தை குறை கூறுவது உங்கள் நோக்கத்துக்கு எந்த வகையிலாவது உதவும் என நினைப்பது வீணில்தான் முடியும் நண்பரே.

//தமிழ் முஸ்லிம்களிடம் காணப்படும் அளவு கடந்த அரேபிய மோகமும், விசுவாசமும், தமது தமிழடையாளத்தை விட்டு, மதத்தால் வந்த அரேபிய அடையாளத்தைச் சிறந்ததாக நினைப்பதும்//

இவ்வாறு உங்களைச் செய்யத் தூண்டுவது எது என்பது பற்றி, உங்கள் நாட்டு முஸ்லீம் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொல்லியது கீழே.
'நாங்கள் வணிகர்களாக இருந்து, இனத்தோடு இனமாக இருந்து, மற்றவர்களைப்போல, அவர்கள் கேட்டபோதெல்லாம் கொடுத்துக் கொண்டுதானிருந்தோம். அடாவடியாக மிகக்கூடுதலாக கேட்டபோது தர இயலவில்லை. வணிகத்திலிருந்து எப்போதும் பெருந்தொகைகளை எடுத்துக் கொண்டேயிருக்க இயலாது. அதனால் நாங்கள் தனிமை படுத்தப்பட்டு முத்திரை குத்தப்பட்டோம்.
மசூதியில் தொழுது கொண்டிருந்த முஸ்லீம்களை கண்மூடித்தனமாகச் சுட்டு எங்களையும், எங்களின் சிறார்களையும, முதியவர்களையும் கொன்று குவித்து அதை மமதையோடு பெருமையடித்துக் கொண்டது எங்கள் பொது எதிரிகளல்ல - இதுநாள்வரை எங்கள் இனமாக நாங்கள் விரும்பிய அதே குழுவினர்தான்.
எங்களை, எங்கள் பெண்டு பிள்ளைகளுடன், எங்கள் சொந்த வாழுமிடங்களிலிருந்து, சொந்த நாட்டின் அகதிகளாக வெளியேற்றியது எங்கிருந்தோ முளைத்து வந்த எதிரிகளல்ல - இதுவரை என் சகோதரனாயிருந்த எங்கள் இனத்தவர்தாம்.
அவர்கள் முஸ்லீம்களாகிய எங்களை தங்கள் இனமாக நினைத்திருந்தால், சொந்த இனத்திலேயே ஒரு குற்றமுமறியாதவர்களை கொலை செய்யத் துணிவரா?

எங்களை அந்த இனமென்று சொல்லப்படுவதையே இப்போது நாங்கள் வெறுக்கிறோம். எங்களை நீங்கள்; சொல்வதுபோல் எங்களின் வேர்களைத் தேடி அலைய வைத்த குற்றவாளிகள் யார்? ........ ....... ....... (இன்னும் பல, கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன்)'

//நீங்கள் என்னுடைய கருத்தை மறுக்கலாம், ஆனால் நான் இதை என்னுடைய சொந்த அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன்.//
உங்களுடைய அதே போன்ற வார்த்தையையே நானும் போடுகிறேன். நீங்கள் அவருடைய இக்கருத்தை மறுக்கலாம். ஆனால் நான் அவரிடமிருந்து கேட்டதை மட்டுமே சொல்கிறேன்.

//எந்த விதத்திலும் இஸ்லாமையோ அல்லது எந்தமதத்தையும் ஏளனம் செய்வதல்ல.//
எந்த விதத்திலும் இழிவு புடுத்தவில்லை என்று சொல்லி, இந்தப் பதிவிலேயே ஏளனம் செய்துள்ளீர். அதைப் பின்னால் விளக்குகிறேன்.

//இலங்கையின் தமிழ் முஸ்லீம்கள், மத அடிப்படையில் ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தியதன் ஆதங்கம், ஆற்றாமை//
அதுவேதான், அதாவது: தமிழ் முஸ்லீம்களின் முதுகில் குத்தியதன் ஆதங்கம், ஆற்றாமை தான் அவர் பேச்சிலும் தொனிக்கிறது.
இதன் உண்மையும் பொய்யும் பற்றி பாதிக்கப்பட்ட நீங்கள் அல்லது அவர்கள் கூடுதலாக அறிவீர்கள். அது பற்றி நான் வாதிட விரும்பவில்லை.
அதற்காக இஸ்லாத்தை இழித்ததால், நான் ஊடே புக நேர்ந்தது.

நீங்கள் இலங்கைத் தமிழராயிருக்கக்கூடும் என்று உங்களது ஓரிரு வார்த்தைகளை வைத்து நான் யூகித்தேன். அதில் உறுதியில்லாததால்தான் இந்தியத் தமிழருக்கு சொல்வது போல் எழுதினேன். இலங்கைத் தமிழராயிருக்கும் பட்சத்தில் மாற்றிப்படிக்கும்படியும், மேற்பகுதியில், கடைசியில் இணைத்தேன்.

உங்களுக்குள் நீங்கள் கலந்து பேசி நல்ல முடிவெடுங்கள். பிரச்னை பற்றியெறியும் இந்நேரத்தில், 'உங்கள் நாட்டுக்குள் ஒரு இனத்துக்குள் உள்ள பிரச்னையில் நல்ல முடிவெடுங்கள். நிம்மதியாக வாழுங்கள்' என்றுதான் நான் கேட்டுக்கொள்கிறேன். என் தமிழினம், தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து விடாமல், சேர்ந்து நல்லிணக்கத்துடன் வாழ வேண்டுமாய் ஏக இறையைப் பிரார்த்திக்கிறேன்.

அடுத்து உங்கள் பதிலுக்கான விளக்கத்தைத் தருகிறேன்.
//சவூதி அரேபியாவையும், அதன் அரசகுடும்பத்திலும், அரேபியர்களிலும், தமது இனமக்களிலுள்ள பாசத்தை விடக் கூடிய பாசமும், விசுவாசமுமுள்ள பல முஸ்லீம்களை எனக்குத் தெரியும், நீங்கள் கூட அதற்கு விதிவிலக்கல்ல.//
அரேபிய மக்களையும் அதன் அரச குடும்பத்தினரையும் பீற்றிக் கொள்ளுமளவுக்கு ஏதுமில்லை என்பதை என் பதிவிலேயே தெளிவு படுத்தியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை பார்வையிடவும்.

//சவூதி அரேபியாவின் பெரும்பான்மையான மக்களும், பெரும்பான்மையான அரபுக்களும் வெறுக்கும் சவூதி அரச குடும்பத்துக்கு வக்காலத்து வாங்கும் உங்களின் எழுத்திலிருந்தே அது தெளிவாகிறது.//
இது குறித்து மாய் யமானி கூறியதாக, நீங்கள் கூறியதை 'சரியாகக் கூறுகிறார்' என்றே எழுதியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை பார்வையிடவும்.

//உலகமே வெறுக்கும் ஒசாமா பின்லாடனுக்கு ஆதரவளித்து வீதிக்குப் படையெடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லீம்கள் இலங்கையிலும், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும் ஏன், உலகம் முழுவதிலும் உள்ளார்கள். ஒசாமாவைக் கூடத்தான் ஜகத்குரு ( புனிதர்) என நினைக்கின்றனர் பல முஸ்லீம்கள்.//
ஒசாமாவை எந்த முஸ்லீமும் ஜகத்குரு என்றேல்லாம் நினைப்பதில்லை. உலகமே வெறுக்கும் அமெரிக்க ரவுடியிசத்தை, இஸ்லாத்தை வெறுக்கும் அமெரிக்காவாலேயே ஊட்டி வளர்க்கப்பட்ட அவர் தனியாக நின்று எதிர்க்கிறாரே என்று ஒரு ஹீரோவாகத்தான் மதிக்கப்படுகிறார். (ஓசாமாவின் அணுகுமறைகள் சரியானவையா என்பது தனி விடயம்.)
இந்தியாவில் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட இந்துக்களை நான் காட்டினால் இந்து மதமே தவறானது என வாதிக்க நீங்கள் முன் வருவீர்களா?

//சர்வாதிகாரி சதாமுக்காக எத்தனை தமிழ் முஸ்லீம்கள் அழுது வடித்தார்கள் இங்கே. சதாமைக் கூட மாவீரன் என மார்தட்டிய தமிழ் முஸ்லீம்கள் எம்மிடையேயுள்ளார்கள்//
நான் மேலே கூறிய அதே மாதிரி, சதாமையும் அமெரிக்க வில்லத்தனத்துக்கு எதிரான ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். திரும்பவும் அதையேதான் கேட்கிறேன்.
அவ்வாறு வாதிட்ட முஸ்லீமல்லாத தமிழர்களை காட்டினால் அதை இந்து மதத்தின் அரேபிய விசுவாசம். இந்து மதத்தின சாபக்கேடு, ஆபத்தானது என்று சொல்வீர்களா? நண்பரே. இப்போதாவது உங்கள் எண்ணத்தில் உள்ள பிழையை உணர முடிகிறதா?

//முஸ்லிம்களுக்கு தமது புனித நகர் மக்கா எந்தளவுக்குப் புனிதமானதோ அதே போல் தான் இந்துக்களுக்கும் அவர்களது புனித நகரங்கள் புனிதமானவை என்பதைச் சில நேரங்களில் முஸ்லீம்கள் மறந்து விடுகிறார்கள் என்பது போல் தோன்றுவது தான் கவலைக்குரிய விடயம்//
உங்களுக்கு தவறாகத் தோன்றுகிறது நண்பரே.
என்னுடைய நிலத்தை அபகரிக்காமல், என்னுடைய வீட்டை இடிக்காமல், எனக்கு எந்தப் பாதகமும் செய்யாமல், உங்களது புனித நகரை நீங்கள் புனிதப்புடுத்தினால் எங்களுக்கு ஆட்சேபணை தெரிவிக்க என்ன இருக்கிறது?. அவ்வாறெல்லாம் முஸ்லீம்கள் உங்கள் புனித நகரங்களுக்கு புனிதம் தருவதை மறுக்கவோ மறக்கவோயில்லை

//அதனால் தான் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த பல்வேறு மதங்களும் இந்தியாவில் செழித்து வளர்ந்தன. ஆனால் அவை எவ்வளவோ முயன்றும் கூட அவற்றால் இந்துமதத்தை விழுங்கி, ஏப்பமிட முடியவில்லை//
சிறிது குழம்பி விட்டீர்கள். இந்து மதம், ஏத்தனையோ மதங்களை விழுங்கி, அவற்றை செரித்து, வளர்ந்ததாக, ஆதாரங்களை அடுக்கியுள்ள பல பதிவுகளை இங்கு என்னால் காட்ட முடியும் நண்பரே. ஆனால் இஸ்லாம் எங்கு சென்றாலும் அதன் தனித்துவத்தை இழக்காது, செம்மாந்து, உயர்ந்து நிற்கும். எத்தனை காலமாகியும் இஸ்லாத்தை விழுங்க முடியா குறைதான், தன்னை உயர்சாதியாக பீற்றிக் கொள்ளும் சில ஈனர்களிடம் இருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.

ஒரு குறிப்பு நண்பரே!. மற்றவற்றிலிருந்து எதையாவது ஒன்றை எடுத்து இஸ்லாத்தில் கூடுதல், குறைவு செய்ய முடியாதென்பதுதான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பே!

//அரேபியாவில் அன்பிருப்பதில் தவறில்லை, ஆனால் அந்த அன்பு அளவுகடந்து, சொந்த சகோதரர்களையும், இனத்தையும் விட்டு, இல்லாத வேர்களைத் தேடி ஒடுவது தான் தவறு என்பது என்னுடைய கருத்து//
'அவ்வாறு அவர்களை ஓடச்செய்தது யாருடைய குற்றம்' என்று அவர் கேட்பதற்கு என்னிடம் பதிலில்லை. அதை நீங்களும் அவர்களும் உங்களுக்குள் கலந்து பேசி நல்ல முடிவாயெடுங்கள்.

//கிறிஸ்தவத் தமிழர்களுக்கு யேசுநாதர் பிறந்த பெத்லகேமிலும், பலஸ்தீனத்திலும் தமிழ் முஸ்லீம்கள் மக்காவில் கொண்ட 'அன்பு' போன்றளவுக்கில்லை. இலங்கைச் சைவர்களுக்கு கைலாசத்திலும், நேபாளத்திலும் அப்படியான அளவு கடந்த அன்பு கிடையாது//.
அது உங்கள் கண்ணோட்டம் மற்றும் அவரவர்களுடைய விருப்பம். அதில் குறை நிறை சொல்வது எனக்கு அவசியமாகப்படவில்லை.

//ஈழத்தில் தமிழன் கொல்லப்படும் போது அவர்களின் இதயம் துடிக்காது ஆனால் ஈராக்கில் குண்டு விழுந்தால் ஆவி துடிக்கும்//
ஈழ மக்களுக்காக போராட்டத்தில் கலந்து கொண்ட எத்தனை எத்தனையோ முஸ்லீம்களும், அமெரிக்காவின் ஈராக்கிய போருக்கெதிராக போராட்டத்தில் கலந்த கொண்ட எத்தனையோ முஸ்லீமல்லாதவர்களும் இருக்கிறார்கள். உங்களின் அழுக்குக் கண்ணாடியை கழற்றிப் பார்த்தால் தெரியம். இது பார்வைக் கோளாறு.
தமிழகத்தில், பெரம்பலூரில், (இஸ்லாத்தில் தற்கொலை பெருந்தவறென்றிருந்தும்) ஈழத்தமிழர்களுக்காக தமது இன்னுயிரை தீக்குத் தின்னக் கொடுத்தவன் ஒரு முஸ்லீம். அவன் எனதூரைச் சார்ந்த எனது சொந்தங்களில் ஒருவன்.

//பெங்களுரில் தமிழர்களுக்கு எதிராக நடப்பவற்றை வெளிப்படையாகக் கண்டிக்க முன்வருவதில்லையே ஏன்?//
என் நாங்களும் கண்டிக்கிறோம். உங்களுக்குத் தெளிவாகத் தெரிவதற்காக –
தஞ்சைத் தரணியில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை, தமிழகத்தின் நியாயமான உரிமையை, உரிய முறைப்படி தராமல் இருப்பதையும், பெங்களுருவில் என் தமிழினத்துக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்பதை இதன் மூலம் பதிவு செய்கிறேன்

//நான் கேட்டதெல்லாம், இஸ்லாம் சமத்துவமான மதம், சவூதி அரேபியா வேறுபாடற்ற சமத்துவமான நாடென்றால்//
இந்து மதத்திலே இல்லாத, நான் கூறிய அந்த சமத்துவம் இஸ்லாத்தில் இருக்கிறது. அது அரேபியாவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
சவூதி இளவரசர் தவறு செய்து, அதற்கு ஆள்பவர்கள் ஆதரவு தந்தால் அது தவறு. இறைவன் முன்னிலையில் தண்டனை பெறுவார் என்று நான் எழுதியுள்ளதை திரும்புவும் பாருங்கள்.

//நான் எத்தனையோ கோயில்களுக்குப் போயிருக்கிறேன், எங்குமே தீண்டாமையை நான் பார்த்ததில்லை//
அவ்வாறிருந்தால் நல்லதுதான். சில குழுவினர்தான் இறைவன் முன் ஓத முடியும். சில குழுவினர் கருவறைக்குள் நுழையக்கூட முடியாதென்ற நடைமுறை இருப்பதாக நான் கேட்டிருக்கிறேன். தமிழிணையத்தில் பற்பல முறை படித்துமிருக்கிறேன். நீங்கள் சொல்வதுதான் உண்மை. அவ்வாறு எழுதியவர்களெல்லாம் தவறென்றால்... நல்லதுதான். அவ்வாறே எல்லோரும் இறைவன் முன் சரிநிகர் சமானம் என்றிருப்பதையே நானும் விரும்புகிறேன் திரு.ஆரூரன்.

//கடவுள் படைத்தது ஆணையும் பெண்ணையும் தான், அந்தப் பெண்ணைக் கடவுளை வழிபடுமிடத்திலிருந்து பிரித்தவர்களுக்குக் கடவுள் முன்னிலையில் யாவரும் சமம் என்ற தத்துவத்தை உச்சரிக்கத் தகுதியுண்டா?//
கடவுள்தான் ஆணையும் பெண்ணையும் படைத்தார். இரு சாராரையும் ஒரே மாதிரி அவர்களின் உருவத்திலும், அங்க அவயங்களிலும், இயல்புகளிலும் படைக்காமல், சில வேற்றுமைகளையும் அவரே ஏற்படுத்தினார். அதனால் ஆணும் பெண்ணும் தங்கள் குடும்பத்திலுள்ள நெருங்கிய சொந்தங்களுடன் வீட்டில் ஒன்றாக தொழ அனுமதித்து, வெளியில் அல்லது பொது இடங்களில், பெண்களும் ஆண்களும் தனித்தனியாக தொழச் செய்ததும் இஸ்லாத்தின் சிறப்புகளில் உள்ள ஒன்றுதான். ஆணும் பெண்ணும் ஒன்றாய் வழிபடுமிடத்திலேற்பட்ட துன்பங்களை அனுபவித்தவர்களுக்கும், அவர்கள் பள்ளிவாசலில் தொழுமிடத்து தனித்தனியாய் தொழுவதிலுள்ள நன்மைகளை அனுபவிப்பவர்களுக்கும் அது புரியும். ஆணையும் பெண்ணையும் ஓரே மாதிரியாக இறைவன் ஏன் படைக்காது விட்டார் என்று உங்களுக்கும் எனக்கும் தெரியுமாதலால் வீண் கேள்விகள் வேண்டாமே!. தவறு ஏற்படக்கூடிய வாய்ப்பைக்கூட இஸ்லாம் தடுக்கிறது என்பதில் எமக்குப் பெருமிதம்தான் நண்பரே.

//ஏதோ நான் அத்வானியின் அபிமானி போலவும், அத்வானி தான் ஈழத்தமிழர்களின் இணையற்ற தலைவர் போலவுமல்லவா பேசுகிறீர்கள், அத்வானியைப் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது, அறிவதற்கு அப்படி ஒரு ஆர்வமும் கிடையாது.//
மன்னியுங்கள் ஐயா. அதை எழுதியது ஆருரன் என்ற ஒரு ஈழத்தமிழர் என்று அப்போது உறுதியாகத் எனக்குத் தெரியாது.

//ஒரு குற்றவாளி எத்தனை முறையும் தண்டனையை அனுபவிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி ஒரு போதும் தண்டனையனுபவிக்கக் கூடாது, அந்த அடிப்படையில் ஷாரியா நவீன நீதித்துறையின் அடிப்படைக் கொள்கைக்கே முரணானது, நீதிபதிகளும் மனிதர்களே//
கையை வெட்டுவதும், கழுத்தை வெட்டுவதும் ஏதோ தினசரி நிகழ்வு போல பேசுகிறீர்கள். சவூதியில் கடைத்தெருவில் நடக்கின்ற மனிதர்களில் மூன்றில் ஒரு மனிதருக்கு கை, கால்கள் வெட்டப்பட்டு இருப்பதைப் போல் நினைக்கிறீர்கள். எல்லா சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு, குற்றம் சந்தேகமற உறுதி செய்யப்பட்டாலே தண்டணையளிக்கப்படும்.

உங்கள் வாதப்படி பார்த்தால் யாருக்கும் தண்டணையே கூடாது. ஏனெனில் நீதிபதிகளும் தவறிழைப்பவர்களே. சிறு தண்டனைதான் என்றாலும் குற்றமற்றவன் அதை அனுபவிக்கக்கூடாது என்பதுதானே கருத்து.

//சகோதரர் சுவனப்பிரியன் பீற்றிக் கொள்ளும் சமத்துவம் சவூதி அரேபியாவில் கிடையாது//
சிலர் பல காலம் ஒரு வீட்டில் உண்டு விட்டு, வேறு வீட்டில் அதை விட கூடுதலாக கிடைக்கிறதென்பதற்காக, உண்ட வீட்டுப் பாத்திரத்திலேயே மலம் கழித்துச் செல்வார்கள். நீங்களும் அவர்களைப் போலவே வாதம் செய்கிறீர் நண்பரே.

பொதுவாக, அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறதென்று பாருங்கள். எங்கேயும் இருக்கின்ற சில விதி விலக்குகளையே விதியென்று கூறாதீர்கள்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் சிலர் பிச்சையெடுத்தே வாழ்கின்றனர். கனடாவில் எப்படி?

அதற்காக அங்கு சவூதியை ஆள்பவர்கள் கூடுதலாக அனுபவிப்பதை இல்லையென்று நான் சொல்வதாக பொருளாகாது. இஸ்லாம் அதை ஆதரிப்பதாகவும் பொருளாகாது.

//நான்கில் ஒரு பங்கு என்பது நான் என்னுடைய தொப்பிக்குள் இருந்து எடுத்த எண்ணல்ல, அமெரிக்கப் பத்திரிகையில் வந்த செய்தியிலிருந்து எடுக்கப்பட்டது//
//முதன் முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலே முதுமாணிப் பட்டம் பெற்ற சவூதிப் பெண். அவர் தான். சவூதி அரசு செய்வதெல்லாம் இஸ்லாமுக்கு எதிரானதென விமர்சிக்கிறாரே தவிர நானல்ல//
அது உங்கள் தொப்பியிலிருந்து அல்ல, நீங்கள் கூறிய மாய் யமானி தொப்பியிலிருந்துதான் எடுத்திருப்பீர்கள். அமெரிக்காவில் அரபியர்களைப் பற்றி பொதுவான கண்ணோட்டம் இருக்கிறது. அதை மறுப்பதற்காக, அந்நாட்டை பிடிக்காத ஒருவர் சொன்னது முழுதும் உண்மையே என்று யூகிக்கும் உங்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று எனக்கும் தெரியவில்லை.
முதன் முதலில் பட்டம் பெற்றதால் அவர் தவறாக சொல்லவே மாட்டாரா? பட்டம் பெறுவதுதான் உண்மையாளனுக்கு உள்ள இலக்கணமா?

//ஒரு சவூதியரே சொல்லும் போது சகோதரர் சுவனப்பிரியன் சொல்வது சரியாக இருக்க முடியாதல்லவா?//
இது மாதிரி பல விடயங்களைச் சொல்லலாம் நண்பரே.
'இது நாள் வரை அத்தலைவரின் கூட இருந்தவரே, அதுவும் அத்தலைவராலேயே தளபதியென போற்றப்பட்டவரே சொல்லும்போது ஆருரன் சொல்வது சரியாக இருக்க முடியாதல்லவா' என்று உங்களின் சில வாதங்களை நான் மறுத்தால், அது சரியானதென்று உங்களால் ஏற்க இயலுமா?!.

//ஒப்பந்தங்களைக் கையெழுத்திட மறுப்பதாகப் பயமுறுத்தியும், போதைப்பொருள் கடத்திய இளவரசரைக் காப்பாற்றியுள்ளது.//
அவ்வாறு நடந்திருந்தால் அது குற்றமே. அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. இஸ்லாம் அதற்கு எதிராக இருக்கிறது.

//அதன்படி 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், அவர் கையையும் வெட்டுவேன்' என்று சொன்ன நபி பெருமகனார்' காட்டிய நீதி நெறி சவூதி இளவரசரைக் காப்பாற்ற மீறப்பட்டுள்ளது. 'இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமல்ல' என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளது//
நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால், நபி பெருமகனார் காட்டிய நீதி நெறி சவூதி இளவரசரைக் காப்பாற்ற மீறப்பட்டுள்ளது என நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அடுத்த வரியில் குழம்புகிறீர்கள்.
அதற்காக 'இஸ்லாமிய சட்டத்தின் முன் ஆண்டியும் அரசனும் சமமல்ல' எனச் சொல்வது அறிவீனம்.
நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டு, அங்கு ஆண்டியும் அரசனும் சமமல்ல' என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

//எண்ணெய் வளம் கொழிக்கும் அரேபியாவும் உதவவில்லை. அது தான் உண்மை, சில முஸ்லீம்கள் இப்பொழுது மறுத்தாலும் அது அல்லாவுக்குத் தெரியும்.//
நாடுகள் தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆபத்து கால உதவிக்காக வைத்திருக்கும். அது அவர்களால் செலவழிக்கப்பட்டிருக்கலாம். ஆதனால் தாமதமேற்பட்டிருக்கலாம். இது வெறும் யூகம்தான். ஏனெனில் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பெருந்தொகையை நன்மையான காரியங்களில் செலவிடுவதாய் நான் கேட்டுள்ளேன்.
ஆனாலும் அவ்வாறில்லாமல், ஆழிப்பேரலை விவகாரத்தில் நீங்கள் சொல்வது உண்மையானால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

முடிவாக: இலங்கைத் தமிழர்களின் துயரமான வாழ்வும் நிலையும் கண்டு, துயருறுபவர்களில் நானும் ஒருவன். அவர்களில் சொந்த மண்ணை விடுத்து, வேறு வழியில்லாமல், புலம் பெயர்நது வாழ்பவர்களை, துயருரும் என் சகோதரர்களாகவே நான் காண்கிறேன்.
எனவே உங்களுக்கிடையிலுள்ள (தமிழ் முஸ்லீம்களுக்கும் மற்ற தமிழர்களுக்கும்) குடும்பத் தகராறில் இஸ்லாத்தை அவமரியாதை செய்யாதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

மாற்றுமதத்தை குறை சொல்வதை தவிர்க்க விரும்புபவன் நான். உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அதற்கான கட்டாயத்தால் வருத்தத்துடனேயே சில விமரிசனங்களை இதில் முன் வைக்க நேர்நதது. எனவே இது குறித்து மேற்கொண்டு எந்த விவாதமும் செய்ய நான் தயாரில்லை.

தங்களின் மனதை காயப்படுத்துவது எனது நோக்கமல்ல. தனிப்பட்ட தாக்குதலாக ஏதும் இதில் இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

[அது மட்டுமில்லாமல் இரவு 11க்கு எழுதத் துவங்கி விடியல் 4 மணிக்குத்தான் எழுதி முடித்தேன். இது என் பணியை பெரிதும் பாதிக்கும். ஏதோ தமிழ் திரட்டிகளின் பக்கம் வந்தோமா தமிழில் நாலெழுத்து நல்லவற்றைப் படித்தோமா, சிறிய மறுமொழி இட்டோமா என்று போவதே எனக்கு வசதி.:)))))))))))]

Posted by சுல்தான் at 12:55 PM



23 comments:
லக்கிலுக் said...
நண்பர் ஆருரனை சில ஆண்டுகளாக அறிவேன். வாதிடுவதில் வல்லவர். அவர் வாதிட்டால் எதிர்வாதம் செய்பவரின் நிலை எப்போதுமே பரிதாபம் தான் :-)

அவர் மனம் நோகாவகையில் சரியான எதிர்வாதத்தை முதன்முறையாக உங்கள் மூலமாக காண்கிறேன்.

உங்கள் இருவருக்குமாக சொற்போர் இனியும் தொடர்ந்தால் நல்லது. எனக்கும் தெளிவுபெற பல விஷயங்கள் உங்கள் இருவரின் வாதங்களிலும் இருக்கிறது.

4:29 PM
Anonymous> said...
//ஈழத்தில் தமிழன் கொல்லப்படும் போது அவர்களின் இதயம் துடிக்காது ஆனால் ஈராக்கில் குண்டு விழுந்தால் ஆவி துடிக்கும்//

1995 இல் யாழ்ப்பாணத்திலிருந்து 5 லட்சம் மக்கள் அகதிகளாக சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பால் இடம் பெயர்ந்து நின்ற போது தமிழகத்தில் நெருப்பில் எரிந்து தன்னை மாய்த்தவன் ஒரு இஸ்லாமிய தமிழன் தான். அவனது உயிரே துடித்தது. இதயம் துடித்ததா என என்ன இத கேள்வி.. ?

யாழ்ப்பாண சைவ உயர் வேளாளர்களின் சிந்தனை இவ்வாறு தான் இருக்கும்.

4:34 PM
Anonymous> said...
அப்துல் ரவூப் என்னும் மனிதன் ஈழத்து சோதருக்காக தன்னை மாய்த்ததை வசதியாக மறந்து விடுகிறாரே ஆரூரன்..?

4:35 PM
சுல்தான் said...
வருகைக்கும் நன்றி திரு.லக்கிலுக்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கும், நான் என்ன சொல்ல விழைகிறேன் என்பதை அவரும், அதனூடாக மற்றவர்களும் அறிகின்றனர். இத்தனை போதுமே.

வீண் விவாதங்களில் பலனேதுமில்லை நண்பரே.

4:37 PM
sreesharan said...
////எண்ணெய் வளம் கொழிக்கும் அரேபியாவும் உதவவில்லை. அது தான் உண்மை, சில முஸ்லீம்கள் இப்பொழுது மறுத்தாலும் அது அல்லாவுக்குத் தெரியும்.//
நாடுகள் தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆபத்து கால உதவிக்காக வைத்திருக்கும். அது அவர்களால் செலவழிக்கப்பட்டிருக்கலாம். ஆதனால் தாமதமேற்பட்டிருக்கலாம். இது வெறும் யூகம்தான். ஏனெனில் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பெருந்தொகையை நன்மையான காரியங்களில் செலவிடுவதாய் நான் கேட்டுள்ளேன்.
ஆனாலும் அவ்வாறில்லாமல், ஆழிப்பேரலை விவகாரத்தில் நீங்கள் சொல்வது உண்மையானால், அங்கு ஆள்பவர்களால், இஸ்லாமிய நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.//

இதனால் நீங்கள் கூறுவது என்னவெனில் இஸ்லாம் மதத்தை பின்பற்றாத யார் அழிந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. உதவ முன்வர மாட்டீர்கள்.

4:48 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி ஸ்ரீஷரன்.
நீங்கள் சொல்வது போன்ற கருத்தை, என் எழுத்தின் எந்தப் பகுதியில் எடுத்தீர்கள் நண்பரே!.

5:55 PM
அழகு said...
ஆரூரான் என்பவர் முழுப்பூசணியைப் பானுக்குள் மறைக்கப் பார்க்கிறார்.

தமிழன் என்று சொல்லிக் கொண்டு, காத்தான்குடி பள்ளியிலும் வாழைச்சேனை, அட்டாளச்சேனையின் அப்பாவித் தமிழ் முஸ்லிம்களைத் தோக்குகளால் ஆசீர்வதித்த அந்தக்காலம் ஒரு பக்கமிருக்கட்டும்.

அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம்.

புலிகள் கஷ்டப்பட்ட காலத்தில் உணவுப் பொருளும் டீஸல் போன்ற அத்யாவசியப் பொருட்களும் கொடுத்து உதவிய மூதூர் மக்களின் நன்றியை மறந்தது மட்டுமின்றி, "24 மணித்தியாளங்களுக்குள் வெளியேறவும்" என்ற உத்தரவை சொந்த(?) சகோதரனுக்கு விடுத்து, பிறந்த மண்ணிலேயே மூதூர் முஸ்லிம்களை அகதிகளாக அலைய விட்டது யார்?

தமிழன்(!)தானே?

பல‌ உயிர்களையும் இலட்சக் கணக்கில் சொத்துக்களையும் மூதூர் முஸ்லிம்கள் இழந்ததற்குக் காரணம் யார்?


தமிழன்(!)தானே?


ஆரூரானால் மறுக்க முடியுமா?


எங்களுடைய தமிழ்ப் பற்றை நிரூபிக்க எவனிடமும் சான்றிதழ் பெறவேண்டிய அவசியம் எமக்கில்லை.

6:13 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அழகு.
உங்களின் கோபத்தைக் குறித்து நான் கருத்து கூறுவது பொருத்தமாயிருக்காது நண்பரே. மன்னிக்கவும்.

6:37 PM
சுல்தான் said...
//தமிழகத்தில் நெருப்பில் எரிந்து தன்னை மாய்த்தவன் ஒரு இஸ்லாமிய தமிழன் தான். அவனது உயிரே துடித்தது. இதயம் துடித்ததா என என்ன இத கேள்வி.. ?//
//அப்துல் ரவூப் என்னும் மனிதன் ஈழத்து சோதருக்காக தன்னை மாய்த்ததை வசதியாக மறந்து விடுகிறாரே ஆரூரன்..?//

வருகைக்கு நன்றி அனானி-1 மற்றும் அனானி-2
அதைத்தான் நான்
//உங்களின் அழுக்குக் கண்ணாடியை கழற்றிப் பார்த்தால் தெரியம். இது பார்வைக் கோளாறு.
தமிழகத்தில், பெரம்பலூரில், (இஸ்லாத்தில் தற்கொலை பெருந்தவறென்றிருந்தும்) ஈழத்தமிழர்களுக்காக தமது இன்னுயிரை தீக்குத் தின்னக் கொடுத்தவன் ஒரு முஸ்லீம். அவன் எனதூரைச் சார்ந்த எனது சொந்தங்களில் ஒருவன்.// என்று குறித்திருக்கிறேன்.

7:01 PM
அட்றா சக்கை said...
சகோதரர் சுல்தான்

அருமையான அழகான நிதானமான பதில்கள்.

unarvukal என்ற பெயரில் எழுதும் சகோதரர் தம் வீட்டுச்சண்டைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் இஸ்லாத்தின் மீது பழி சுமத்தி இருக்கிறார். அது போன்ற ஒரு வாய்ப்புக்காகவே காத்திருந்த முதல் த.அ. ஒன்று அவர் பதிவில் விவாதத்தைத் திசை திருப்ப மலம் கழித்துச் சென்றிருக்கிறது. அதை அவர் அறிந்தே பிரசுரித்தாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.

இருப்பினும் அந்த த.அ. மூலம் விவாதம் திசைதிருப்பாமல் அழகான பதில்களைத் தந்து சுமுகமான விவாதத்தைத் தொடர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

குறிப்பு: த.அ = தமிழ்மண அனாதை

10:56 PM
Anonymous> said...
//சிலர் பல காலம் ஒரு வீட்டில் உண்டு விட்டு, வேறு வீட்டில் அதை விட கூடுதலாக கிடைக்கிறதென்பதற்காக, உண்ட வீட்டுப் பாத்திரத்திலேயே மலம் கழித்துச் செல்வார்கள்.//

இவர் யாரென்று சொல்லுங்களேன்!

10:56 PM
சுவனப்பிரியன் said...
நண்பர் சுல்தான்!

பல வேளைகளுக்கு மத்தியில் இரவு 4 மணிவரை பதிவை எழுதி முடித்திருக்கிறீர்கள். உங்களின் ஆர்வம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. தொடரட்டும் உங்கள் பணி.

நண்பர் ஆரூரானுக்கு இலங்கை தமிழ் இந்துக்களும், தமிழ் முஸ்லிம்களும் ஏன் ஒன்றுபடவில்லை என்பதை ஒரு இலங்கையரை வைத்தே பதிலளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

5:31 AM
சுல்தான் said...
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அட்றா சக்கை.
இஸ்லாத்தை யார் இழித்துச் சொல்வார்கள்! அங்கே போய் எவ்வாறு விஷமம் செய்யலாம்! என்று ஒருவரல்ல. தமிழிணையத்தில் ஒரு குழுவே காத்திருக்கிறது சகோதரரே.

2:58 PM
சுல்தான் said...
அனானி 3 வருகைக்கு நன்றி.
அவர் யாரென்று நான் வேறு சொல்ல வேண்டுமா?
அவரை விருந்துக்கு அழைத்தால், அவர் உண்பதிலே கவனம் செலுத்தாமல், உண்டு முடித்த இடம் எவ்வாறு இருக்கும்(!??!) என்று பார்த்து அதை ஏளனம் செய்வதிலே பெருமை கொள்ளும் பின்புத்திக்காரர்
எல்லோரும் அறிந்தே இருக்கிறார்கள்.

3:04 PM
சுல்தான் said...
தொடர் வருகைகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி சுவனப்ரியன்

3:06 PM
அப்துல் குத்தூஸ் said...
சகோதரர் சுல்தான் அவர்களுக்கு என் நன்றிகள்.

சரியாகத்தான் பதில் கொடுத்துள்ளீர்கள். ஆனால், இது இஸ்லாத்தின் உயர்வுக்கு அணி சேர்ப்பதாகவல்லவா உள்ளது. நிச்சியம் அதை இவர்களால் ஜீரணிக்க இயலாது. அதனால் இப்பொழுது உள்வாங்குவார்கள். சிறிது காலம் கழித்து மீண்டும் அதே பல்லவியை வேறோரு அவதாரத்தில் ஆரம்பிப்பார்கள்.

3:37 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி அப்துல் குத்தூஸ்.

3:55 PM
லொடுக்கு said...
உள்குத்து/வெளிகுத்து இல்லாமல், விவாதத்தை திசை திருப்பாமல், சுற்றி வளைக்காமல் சிலர் மட்டுமே தமிழ்மணத்தில் எழுத காண்கிறேன். அதில் நீங்களும் ஒருவர். உங்களின் வாதம் அருமை. உங்களிடமிருந்து அறிந்து கொள்ள நிறைய இருக்கிறது.

தொடருங்கள்!

4:16 PM
சுல்தான் said...
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி லொடுக்கு.

4:30 PM
Anonymous> said...
சகோதரர் சுல்தான் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் மற்றும் மறுமை வாழ்வு சிறப்பதற்கான பிரார்த்தனைகளும்.

திரு.ஸ்ரீசரன் அவர்களின் பார்வைக்கு..

//இதனால் நீங்கள் கூறுவது என்னவெனில் இஸ்லாம் மதத்தை பின்பற்றாத யார் அழிந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. உதவ முன்வர மாட்டீர்கள்.//

தமிழகத்தில் ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் பொருளாதாரம் வசூலித்து கொடுத்து உதவியது. நோய் தொற்றும் என்ற பயத்தில் பலரும் தொட அஞ்சிய அழுகிய உடல்களை எ(உ)ங்களது முஸ்லிம் சகோதரர்கள் தொட்டு தூக்கி சேவையாற்றியுள்ளனர்.

அரசியல்வாதிகளோ, சினிமா நடிகர்களோ 5 ரூபாய் தர்மம் வழங்கினாலும் அதை 5000 ரூபாய் செலவு செய்து மக்களுக்கு எடுத்துச்செல்லும் செய்தி நிறுவனங்கள் தமிழகத்தில் தாராளமாக உண்டு. எங்களுடைய இந்த சேவைகளை பொதுவான மக்களுக்கு எடுத்துச்சொல்ல (எங்களைத்தவிர) எங்களுக்கு நாதியில்லை.

ஒரு மனிதனின் சோகத்தில், இழப்பில் மதத்தைப்பார்த்து உதவுவது என்பது மனிதத்தன்மைக்கு முற்றிலும் எதிரானது. மனிதத்தன்மைக்கு உறியவர்களாக முஸ்லிம்கள் நாங்கள் நடந்து காட்டி இருக்கிறோம். அப்படி இருக்கச்சொல்லி இஸ்லாம் எங்களுக்கு கட்டளையிட்டிருப்பதால்.

இஸ்லாத்தை பின்பற்றாதவர்களாக இருந்தாலும் அவர்களுடைய சோகத்தில் பங்கு கொள்வது, அதற்காக உதவுவது எங்களுடைய கடமையாக இருக்கிறது.

அபிவிருத்தி
ரியாத் - சவுதி அரேபியா

6:52 PM
சுல்தான் said...
முதன் முதலாக என் பதிவுக்கு வருகை தந்துள்ளமைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அபிவிருத்தி(பரக்கத்).

7:06 PM
முஸ்லிம் said...
சுல்தான் நல்ல விளக்கமளித்துள்ளீர்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

7:53 PM
சுல்தான் said...
வருகைக்கு நன்றி முஸ்லீம் அவர்களே.

8:11 PM

2 comments:

╬அதி. அழகு╬ said...

சுல்தான் said...
வருகைக்கு நன்றி அழகு.
உங்களின் கோபத்தைக் குறித்து நான் கருத்து கூறுவது பொருத்தமாயிருக்காது நண்பரே. மன்னிக்கவும்.

Please visit:

http://www.tamilcircle.net/unicode/general_unicode/muthoor.html

Unknown said...

தொடுப்புக்கு நன்றி அழகு. பெரிய பதிவாயிருக்கிறது. பொறுமையாய் படித்து விட்டு நிகழ்வுகளை அறிய வேண்டும்.